அம்பாங் ஜெயாவிலுள்ள பண்டான் இண்டாவில் உணவு விநியோகம் செய்துவரும் இருவரை நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கெத்தும் நீர் அடங்கிய 120 திரவ போத்தல்களையும் பறிமுதல் செய்ததாக, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறினார்.
போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு போலீஸ் குழு நடத்திய சோதனையில், சந்தேகத்தின் பேரில் 25 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்தது.
“சம்பந்தப்பட்ட நபரை பரிசோதனை செய்ததில் 11 பிளாஸ்டிக் போத்தல்களில் கெத்தும் நீர் இருந்தது, அதன் மொத்த அளவு 8.25 லிட்டர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
“விசாரணையின் அடிப்படையில் அங்குள்ள ஒரு வீட்டில் 35 வயதுடைய மற்றொரு நபரைக் கைது செய்ய வழிவகுத்தது, மேலும் அவ்வீட்டிலிருந்தும் கெத்தும் நீர் என்று நம்பப்படும் திரவம் நிரப்பப்பட்ட மேலும் இரண்டு போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இரண்டாவது சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் பின்னர், கெத்தும் நீர் சேமிக்கப் பயன்படும் இடம் என நம்பப்படும் மற்றொரு வீட்டில் மேற்கொண்ட சோதனையில், அங்கு கெத்தும் நீர் அடங்கிய 111 போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
“விஷம் சட்டம் 1952 இன் பிரிவு 30 (3) இன் படி விசாரணைக்கு உதவ, இரு சந்தேக நபர்களும் இன்று முதல் மார்ச் 20 வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் மேலும் கூறினார்.