பாடாங் தேராப் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வில்களை பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
20 முதல் 32 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்களும், கெடா போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவால் மார்ச் 21 அன்று பாடாங் தேராப் மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக, கெடா காவல்துறை துணைத் தலைவர், டத்தோ முகமட் ரோஸ் ஷாரி கூறினார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல் மற்றும் உளவு நடவடிக்கையின் அடிப்படையில் குறித்த சோதனைகள் மற்றும் கைதுகள் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
“அதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட வில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
“துப்பாக்கிச் சட்டம் 1971 இன் பிரிவு 8 மற்றும் ஆயுதங்கள் சட்டம் 1960 இன் பிரிவு 8 இன் படி, இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
“இதுவரை, கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் இரண்டு பேர் மார்ச் 27 அன்று அலோர் ஸ்டார் அமர்வு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.