துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தல்; ஆடவர் கைது

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் பெரும் அளவிலான தங்க கட்டிகள் அவ்வப்போது சுங்க இலாகா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்துக்கு பயணிகள் போர்வையில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அப்போது துபாயில் இருந்து வந்திறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததால், ஏதேனும் பொருட்களை கடத்தி கொண்டு வந்துள்ளாரா? என்பதை கண்டுபிடிக்க அவரது உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.

அதில் கம்ப்யூட்டர் உதரிபாகங்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது, அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.63 லட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 165 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கடத்தல் வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் தங்கத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here