சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார். வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தர்மனுக்கு 70.4 விழுக்காடு வாக்குகள் கிட்டின.
முடிவுகள் கிட்டத்தட்ட இரவு 12.30 மணியளவில் வெளிவந்தன. மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான்பின் தாமான் ஜூரோங் சந்தையில் ஊடகத்தி னரிடம் பேசிய தர்மன், சிங்கப்பூர் வாக்காளர்கள் அளித்த ஆதரவிற்குத் தலைவணங்குவதாகக் கூறினார்.
நடப்பு விவகாரங்களை அணுக்கமாகப் பின்தொடர்ந்து, அதிபர் தேர்தல் கால கட்டத்தின்போது அமைதியுடன் ஈடுபாடு காட்டியதற்காக சிங்கப்பூரர்களுக்கு தர்மன் நன்றி கூறினார்.
மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்த சிறிது நேரத்தில், இங் தேர்தலில் தம் தோல்வியை ஒப்புக்கொண்டார். தர்மன் தொலைபேசி வழியாக தம்மைப் பாராட்டி, துடிப்பான பிரசாரத்தைத் தந்திருந்த தமது குழுவிற்கும் நன்றி தெரிவித்ததாக இங் கூறினார். பெரும் வெற்றி அடைந்த தர்மனைத் தாமும் வாழ்த்தியதாக அவர் கூறினார்.
தேர்தல் முடிவு குறித்து தர்மனை வாழ்த்தியதாகக் கூறிய டான், தேர்தலில் தாம் பெற்ற வாக்குகளைவிட கூடுதலாக எதிர்பார்த்திருந்ததாகக் கூறினார். ஆனாலும், தேர்தல் என்று வரும்போது நிச்சயமின்மை இருக்கும் என்று நினைப்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில், செப்டம்பர் 14ஆம் தேதி தர்மன் அதிபராகப் பதவியேற்பார் என்று எனப் பிரதமர் லீ சியன் லூங் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.