திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இவ்வாண்டு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இதில், இன்று 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று இன்று இரவு 7 மணிக்கு அங்குராற்பன நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாள்களும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெறும்.
பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதும், ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் கோயிலின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து, தலையில் பட்டு வஸ்திரங்களை சுமந்து வந்து சுவாமிக்கு சமர்ப்பிப்பார்.
பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 22ஆம் தேதி நடக்கிறது.
கருட சேவை அன்று நான்கு மாட வீதிகளில் ஏறக்குறைய இரண்டு லட்சம் பக்தர்களை தேவஸ்தானம் அனுமதிக்கவிருக்கிறது.
அடுத்த நாள் 23ஆம் தேதி தங்கத்தேர் பவனி, 26ஆம் தேதி தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவ விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் மருத்துவ சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அது மட்டுமல்லாமல் பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஆறு லட்சம் லட்டுக்கள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.