கோலாலம்பூர்:
கடந்த அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பேராக்கில் முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.
28 மற்றும் 38 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும், மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமட் யூசுப் கூறினார்.
இந்த மோசடிக் கும்பல் AGNC CAPITAL SERVICES என்ற பெயரில் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் தனது செயல்பாட்டைத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்திற்குள் இலாபம் கிடைக்கும் என்று உறுதியளித்து, RM100க்கு குறைவான முதலீடுகளை வழங்கும் அவர்களது முதலீட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்த பல்வேறு சமூக ஊடக தளங்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.
“இதுவரை, இக்குழுவுடன் தொடர்புடைய மொத்தம் RM78,900 இழப்பு சம்பந்தப்பட்ட நான்கு போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் இந்த மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்ட நபர்கள் காவல்துறையில் புகார் அளிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
இதுதவிர சோதனையின் போது, 17 மொபைல் போன்கள், ஒரு லேப்டாப், இரண்டு செட் மோடம்கள், 8 நோட்புக்குகள் மற்றும் முதலீட்டு மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வங்கி அறிக்கைகள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியதாக ராம்லி கூறினார்.