ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆன்மீக சுற்றுலா வந்த பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேசத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் இந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருந்து பஸ் ஒன்றில் ஆன்மீக பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு 60க்கும் மேற்பட்டோர் சென்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெசாய் மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயத்திற்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். பஸ் ஜம்மு மாவட்டத்தின் சோகி ஷோரா பெல்டில் உள்ள டாங்கிலி மோர் அருகே வந்த போது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் தறிகெட்டு ஓடிய பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்தவர்கள் படுகாயமடைந்து அலறி துடித்தனர். பஸ் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் போலீசார், மீட்பு படையின் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் 21 பேர் பலியாகினர் என்றும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்மீக சுற்றுலா வந்த இடத்தில் விபத்தில் சிக்கி 21 பேர் பலியாகியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜம்மு அருகே பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் பலர் பலியாகியிருப்பது கூற முடியாத வேதனையை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கேவும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்










