மும்பையில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா பகுதியில் அமைந்துள்ள பூஷி அணைக்கு அருகில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றில் ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் என ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் நேரத்தில் நிகழ்ந்தது.

இதில் புனேயைச் சேர்ந்த குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர்.

இயற்கை எழில் கொஞ்சும் பூஷி அணைக்கு பார்வையாளர்கள் வருவது வழக்கம். அந்தப் பகுதியில் தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று புனேயின் ஹதப்சரைச் சேர்ந்த லியாகத் அன்சாரி மற்றும் யூனுஸ் கானின் குடும்பத்தினர் 18 பேர் பூஷி அணைக்கு வந்துள்ளனர். அணையின் பின்புறம் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

அப்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்துள்ளது. அதில் 10 பேர் சிக்கி தவித்துள்ளனர். அதிலிருந்து 2 பேர் தப்பிய நிலையில், 7 பேர் மாட்டிக் கொண்டுள்ளனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர்கள் எழுவரும் மாயமாகினர். இதனைக் கண்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு உள்ளூர் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன.

போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

பின்னர் இன்று திங்கட்கிழமை காலை தேடுதல் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

மீட்கப்பட்டவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

40 வயது பெண் ஒருவர் மற்றும் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 9 வயது சிறுமி, 4 வயது சிறுவனின் உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. லோனாவாலா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் சுமார் 163 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மழைக் காலம் என்பதால் நீர்வீழ்ச்சிக்கு வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சூழலில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்ஹினி காட் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடிக்கும் போது அடித்து செல்லப்பட்டுள்ளார். தற்போது இந்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர் தனது நண்பர்கள் 32 பேர்களுடன் சேர்ந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்துள்ளார். வந்த இடத்தில் நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு இளைஞர் காணாமல் போயுள்ளார்.

2 நாள்களாக இளைஞரை தேடியும் அவரது உடல் இன்னமும் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, மழைக்காலங்களில் காடுகள் மலைகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று புனே வனத்துறை அதிகாரி துஷார் சவான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here