நியூயார்க்:
உலகளவில் எட்டில் ஒரு பெண் (8:1) 18 வயதை அடைவதற்குள் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறார் அமைப்பு (UNICEF) புதன்கிழமையன்று (அக்.9) தெரிவித்தது.
எண்ணிக்கையைப் பொறுத்தவரை 370 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் 18 வயதுக்குள் பாலியல் வன்கொடுமையை எதிர்நோக்குகின்றனர் என்பது மிகவும் வேதனையளிக்கிறது.
உடல் ரிதியான தொடர்பில்லாத பாலியல் வன்முறைச் சம்பவங்களைக் கருத்தில்கொள்ளும்போது ஐந்தில் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இணையம்வழி இழைக்கப்படும் துன்புறுத்தல், வார்த்தைகளின் மூலம் இழைக்கப்படும் துன்புறுத்தல் உள்ளிட்டவை உடல் ரீதியாக மேற்கொள்ளப்படாத பாலியல் வன்கொடுமைச் செயல்களில் அடங்கும். ஐந்தில் ஒருவர் என்பது 650 மில்லியனாகும்.
இதன் தொடர்பில் பொதுவாக பெண்கள்தான் மிக அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும் 240-310 மில்லியனுக்கு இடைப்பட்ட ஆண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக UNICEF தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், 11 ஆண்களில் ஒருவர் பிள்ளைப் பருவத்தில் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











