இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் ; அமெரிக்கா எச்சரிக்கை

கொழும்பு:

லங்கைக்கு வரும் இஸ்ரேலிய சுற்றுப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சாத்தியம் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிடிபட்டு உள்ள மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதேநேரம், அமெரிக்காவின் எச்சரிக்கையை மிகவும் முக்கியமான தகவலாக எடுத்துக்கொண்டு, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் கூறியுள்ளார்.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் யூத சமூகத்தினர் அதிகமாக ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த மூவரும் பிடிபட்டனர்.

“குறிப்பாக, அறுகம் குடா உல்லாசத்தலத்தைச் சுற்றிலும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதர சுற்றுலாத் தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது,” என்றார் அவர்.

இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கைக்குச் சுற்றுப்பயணியாக வந்த 1.5 மில்லியன் பேரில் 1.5 விழுக்காட்டுக்கும் குறைவானோர் இஸ்ரேலிய குடிமக்கள். அதாவது, ஏறத்தாழ 20,000 இஸ்ரேலியர்கள் இந்த ஒன்பது மாதத்தில் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது 570 இஸ்ரேலியர்கள் இலங்கையில் உள்ளனர். அவர்களுக்காக இலங்கைக் காவல்துறை அவசர உதவிக்கான தொலைபேசி வசதியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, அறுகம் குடா விடுமுறை உல்லாத்தலத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது குடிமக்களைக் கேட்டுக்கொண்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here