முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக புத்ராஜெயா பேலஸ் ஆஃப் ஜஸ்டிஸ் முன்பாக ஜனவரி 6 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுத்திருக்கிறது.
இப்பேரணி ஏற்பாட்டாளர்கள் அனுமதி கேட்டு டிசம்பர் 31 ஆம் தேதி விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர் என்று புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டி ஷாம் முகமட் கூறினார்.
ஆய்வுக்குப் பின்னர் அந்த விண்ணப்பம் முழுமை பெற்றிருக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
போலீஸ் தரப்பின் இம்முடிவு ஏற்பாட்டாளர்களுக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 456 போலீஸ் அதிகாரிகள், உறுப்பினர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர் என்று அய்டி ஷாம் குறிப்பிட்டார்.

























