டாக்டர்-நர்சுகளுக்கு தொற்றுநோய் பாதிக்காமல் தவிர்க்க பள்ளி மாணவன் தயாரித்த ‘நர்சிங் ரோபோ’

திருவனந்தபுரம்:தொற்று நோய்கள் பரவலில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா திகழ்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு நம் நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட முதல் மாநிலம் கேரளா தான். அதன்பிறகே தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவில் மழைக் காலம், வெயில் காலம் என எந்த காலநிலை என்றாலும் ஏதாவது ஒரு தொற்றுநோய் பரவத்தான் செய்கிறது. தொற்று நோய்கள் பரவலை தடுக்க மாநில சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் பல நோய்களை கட்டுப்படுத்த முடிவதில்லை.

இதன் காரணமாக தொற்று நோய்களுக்கு அதிக உயிர்பலியும் ஏற்படுகிறது. பல தொற்று நோய்கள் வேகமாக பரவுவதற்கு மனிதர்களுக்கு இடையே நேரடி தொடர்பு இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது. நேரடி தொடர்பு என்பது மக்களிடையே சாத்தியம்.

அதே நேரத்தில் நோயாளிகளுக்கும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு நேரடி தொடர்பு என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நோய் பாதித்தவர்களுக்கு எப்படியும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் சிகிச்சை அளித்து தான் ஆகவேண்டும்.

இதன் காரணமாக தொற்று நோய்கள் மருத்துவர்கள் மற்றும் நர்சுகளையும் பாதித்து விடுகிறது. இதனை தடுக்கும் விதமாக கேரள மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவர், “நர்சிங் ரோபோ” தயாரித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவரான ஆதிதேவ் தான், அந்த ரோபோவை வடிவமைத்து இருக்கிறார். கொரோனா போன்ற ஆபத்தான தொற்றுநோய்கள் பாதிப்பின் போது, சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே இந்த ரோபோவை மாணவர் ஆதிதேவ் தயாரித்துள்ளார்.

இந்த ரோபோ தொற்று நோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நேரடியாக மருந்துகளை வழங்குவது தவிர்க்கப்படும்.

நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை ரோபோவே வழங்கும். மாணவன் தயாரித்துள்ள இந்த ரோபோவில் வீடியோ அழைப்பு வசதியும் இருக்கிறது. இதனை ரிமோட் மூலமாக இயக்க முடியும். பல்வேறு பரப்புகளில் ரோபோ நகர்ந்து செல்லும்.

இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் மற்றும் நர்சுகள் 100 மீட்டர் தொலைவில் இருந்த படி ரோபோவை இயக்கி நோயாளிகளை கண்காணித்து மருந்து வழங்க முடியும். இந்த ரோபோ இரவிலும் செயல்படும் வகையில் எல்.இ.டி. விளக்குகள் இருக்கின்றன.

இந்த ரோபோவை மாணவர் ஆதிதேவ் சமீபத்தில் இயக்கி காண்பித்தார். மாணவர் ஆதிதேவின் தாய் ஜிஷா நர்சிங் கல்லூரி ஆசிரியை ஆவார். தந்தை திலீப் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிகிறார்.

ஆதிதேவ் 4 வயது சிறுவனாக இருந்தபோதே எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட பொம்மைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அது தற்போது மருத்துவ துறைக்கு தேவையான ஒரு ரோபோவை உருவாக்கும் வகையில் மாணவனை மாற்றியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here