நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்

சென்னை:

மத்திய அரசின் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுதும் மாவட்டத் தலைநகரங்களில் கடந்த சனிக்கிழமை மெழுகுவத்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அண்மையில் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இதுவரை நீட் தேர்வை திமுக அரசால் ரத்துச் செய்ய முடியவில்லை. நீட் தேர்வால் இதுவரை 22 மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு அதிமுக மாணவரணி சார்பில் ஏப்ரல் 19ஆம் தேதி கண்ணீர் அஞ்சலி செலுத்தி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக இளைஞரணி சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் பங்கேற்ற அதிமுக மாணவரணியினர் கறுப்பு சட்டை அணிந்து, மெழுகுவத்தி ஏந்தியவாறு, நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தி, திமுக அரசுக்கு எதிராக முழக்க வரிகளை எழுப்பினர்.

சென்னை எழும்பூரில், மாணவரணி மாநிலச் செயலாளர் சிங்கை ஜி.ராமசந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசும்போது, “நீட் தேர்வு ரகசியம் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டுமே தெரியும் என்று கூறினார்.

ஆனால் நான்கு ஆண்டுகளைக் கடந்த பின்னும் நீட் விலக்கு கொண்டு வரப்படவில்லை. 22 மாணவர்கள் உயிரிழந்ததுதான் இவர்களுக்குத் தெரிந்த ‘நீட்’ ரகசியம். கையெழுத்து இயக்கம், அனைத்துக் கட்சிக் கூட்டம் போன்ற நாடகங்கள் முடிந்துவிட்டன. ஆட்சி முடியப்போகிறது உதயநிதியும், ஸ்டாலினும் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here