ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்
திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
சமீபத்தில் தான் இசையமைத்த பாடல்கள் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அனுமதின்றி பயன்படுத்தியதால் இளையராஜா ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை பயன்படுத்தியதால் இளையராஜா இந்த நோட்டீசை அளித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் நடைப்பெற்ற `விட்ஃபா கீதம்’ வெளியீட்டு விழாவில் இளையராஜாவின் தம்பி மற்றும் இசையமைப்பாளரான கங்கை அமரன் பேசியுள்ளார் அதில் அவர் கூறியதாவது ” 7 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து போட்ட இசைக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் எங்களுடைய பாட்டு போட்டால் தான் ரசிகர்கள் கொண்டாடி கைத்தட்டி மகிழ்கின்றனர். அப்போது அதனை பயன்படுத்த அனுமதி என் அண்ணன் இளையராஜாவிடம் கேட்டுருக்க வேண்டும். அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதால் தான் அவருக்கு கோபம் வருகிறது.
நாங்கள் இசையமைத்த எல்லாம் பாடல்களுக்கும் இளையராஜாதான் காப்புரிமை வைத்துள்ளார். ஒரு படத்தை இயக்கிய கதையாசிரியருக்கு எப்படி அவரது கதையின் மீது உரிமை இருக்கோ அதேப்போல் ஒவ்வொரு இசை கலைஞன் இசையமைத்த பாடலுக்கு அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. நாங்கள் காசுக்கு ஆசைப்பட்டு இதை செய்யவில்லை. எங்களிடம் காசு கொட்டி கிடக்கிறது. எங்களுடைய உரிமைக்காகத் தான் கேட்கிறோம்” என கூறியுள்ளார்.