கோலாலம்பூர்:
சிஜில் பெலஜாரான் மலேசியா எனப்படும் SPM தேர்வில் சிறந்து விளங்கிய 87 ஓராங் அஸ்லி மாணவர்களுக்கு மஜ்லிஸ் அமானா ரக்யாட் (Mara) முழு நிதியுதவி அளிக்கிறது.
“மாரா கல்வி நிறுவனங்களில் முழு நிதியுதவியுடன், சிறந்த SPM முடிவுகளைக் கொண்ட 87 ஒராங் அஸ்லி மாணவர்களுக்கு மாரா ஒரு சிறப்புப் பாதையை வழங்கும் என்றும், “அறிவு மட்டுமே வாழ்க்கையை மாற்றும்!” என்று மாரா தலைவர் டத்தோ அசிரஃப் வாஜ்டி துசுகி தெரிவித்தார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, துணைப் பிரதமரும் கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி, SPM இல் 5A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற ஓராங் அஸ்லி மாணவர்களுக்கு மாரா கல்வி நிறுவனங்களில் சேர்க்கை உறுதி செய்யப்படும் என்று கூறினார்.
அதோடு சிறந்த அடைவுநிலையை பெற்ற ஓராங் அஸ்லி மாணவர்களுக்கு 100 விழுக்காடு உதவித்தொகை வழங்க அசிரஃபுக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.
இதுதவிர SPM இல் 5A க்கும் குறைவாகப் பெற்ற ஓராங் அஸ்லி மாணவர்கள் இன்னும் மாரா கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடரலாம் என்றார்.
2024 ஆம் ஆண்டில், தீபகற்ப மலேசியா முழுவதும் மொத்தம் 1,932 ஓ =ராங் அஸ்லி மாணவர்கள் SPM தேர்வில் பங்கேற்றனர். அந்த எண்ணிக்கையில், 87 மாணவர்கள் 5A அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றனர் – இரண்டு பேர் 9A, 13 பேர் 8A, 11 பேர் 7A, 22 பேர் 6A மதிப்பெண்களும் 39 பேர் 5A மதிப்பெண்களும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.