எம்ஏசிசி 2024இல் மட்டும் 285 மில்லியன் ரிங்கிட் சொத்துகளைப் பறிமுதல் செய்தது அஸாம் பாக்கி தகவல் .

கோலாலம்பூர்,

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 285 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஊழல் குற்ற செயல்களில் சம்பந்தப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது. இந்த பறிமுதல் நடவடிக்கைகள் ஆணையத்தின் சிறந்த செயல்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கிறது என்றும் அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி இவ்வாண்டின் முதல் காலாண்டில் மட்டும் எம்ஏசிசி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட ஊழல் விசாரணையில் ரொக்கமும் தங்கக் கட்டிகள் உட்பட 177 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளது.

அரசாங்கப் பதவியில் உள்ளவர்கள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் விசாரணை நடத்துவதில் எம்ஏசிசிக்கு ஒரு சிக்கலோ இடையூறோ இல்லை என்பதை இது காட்டுகிறது என்று கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்ஏசிசி 5ஆவது செய்தியாளர் விருது நிகழ்ச்சியின்போது அவர் கூறினார்.

அனைத்து ஊடகங்களும் உண்மையை முன்னிலைப்படுத்தும் ஒழுங்குமுறைகளை, நெறிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறு வலியுறுத்த விரும்புகிறேன். ஊகங்களைத் தவிர்த்து செய்தியை வெளியிடுவதற்கு முன் தகவல் மூலங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

வேகமான, அதே சமயத்தில் நிரூபிக்க முடியாத தகவல்களின் டிஜிட்டல் உலகத்தில் தவறான செய்திகள் நிறுவனங்களின் மதிப்பைக் கெடுக்கக்கூடும், மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும், மறுசீரமைப்புச் செயல்களைத் தோல்வியடையச் செய்யக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நம்பகத்தன்மை கொண்ட செய்தி தளங்களும் சரியான தகவல்கள் மக்களிடம் செல்வதை உறுதிப்படுத்தும் முக்கியத் தூண்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவில் சபா மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி, ஆணையத்தின் உயர்’ அதிகாரிகள், மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ ச.கோபாலகிருஷ்ணன், இதர ஊடக இயக்குநர்கள், ஊடகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here