தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக மடானி தள்ளுபடி அட்டை அறிமுகப்படுத்தப்படும்

கோலாலம்பூர்:  தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக மடானி தள்ளுபடி அட்டையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு மில்லியன் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை வழங்கும் 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 30% வரை தள்ளுபடியை வழங்குகிறது.

இந்த முயற்சியின் மூலம் தள்ளுபடிகளை வழங்கும் நிறுவனங்களில் ஏயோன், மைடின், ஜேகல், மேரிபிரவுன், கெந்திங், ஓல்ட் டவுன் ஒயிட் காபி, ஜூஸ் காபி ஆகியவை அடங்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பங்கேற்கும் வணிகங்களில் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு தள்ளுபடிகளை வழங்குவதற்காக இந்த அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர்  புக்கிட் ஜாலீலில் உள்ள ஆக்சியாட்டா அரங்கில் நடைபெற்ற 2025 தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் கூறியதாக என்று பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

துணைப் பிரதமர்கள் அஹ்மட் ஜாஹித் ஹமிடி,  ஃபாடில்ல யூசோப், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கிக் தொழிலாளர்கள் மசோதாவின் திருத்தப்பட்ட வரைவு நிறைவடைந்துவிட்டதாகவும், அடுத்த மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் சிம் கூறினார். அமைச்சகம் ஆராய்ச்சி, ஆலோசனைகள், பங்குதாரர்களுடன் ஈடுபாட்டு அமர்வுகளை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் ஆன்லைன் கருத்துக்களைப் பெற்றோம். பெரிய அளவிலான டவுன் ஹால் ஒன்றை நடத்தினோம். 3,000க்கும் மேற்பட்ட பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

தெளிவு, நடைமுறை மற்றும் விரைவான செயல்படுத்தலை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அதைச் செம்மைப்படுத்த வேண்டும் என்று பல கிக் பொருளாதார நிறுவனங்களின் அழைப்புகளைத் தொடர்ந்து, இந்த மசோதா டிசம்பர் 2024, இந்த ஆண்டு மார்ச் மாதங்களில் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களில், கிக் தொழிலாளர்களுக்கான அதிகாரப்பூர்வ வரையறையை அறிமுகப்படுத்துதல், குறைந்தபட்ச இழப்பீட்டை நிறுவுதல், புகார் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கு (பெர்கெசோ) கட்டாய பங்களிப்புகள் போன்ற சமூகப் பாதுகாப்புகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here