ஜகார்த்தா:
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பணியாற்றும் அந்நாட்டு அரசு ஊழியர்கள் அனைவரும் புதன்கிழமைகளில் பணிக்கு வரும்போது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இல்லையெனில், அவர்கள் பதவி உயர்வை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தாவில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலையும் காற்று மாசையும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அவ்வட்டார ஆளுநர் பிரமோனோ அனுங் அறிமுகப்படுத்திய கொள்கையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 30ஆம் தேதி அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“குறைந்த பட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் பொறுப்பில் இருக்கும்வரை இந்தக் கொள்கையை மீறும் எந்தவொரு அரசு ஊழியருக்கும் பதவி உயர்வு கிடையாது,” என பிரமோனோ கூறியதாக ‘ஜகார்த்தா குளோப்’ நாளிதழ் மே 8ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
“அதை வெறும் உத்தரவாக மட்டுமல்லாமல், ஊழியர்களுக்குப் புதிய வாழ்க்கை முறை மாற்றத்திற்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். பொதுப் போக்குவரத்துதான் ஜகார்த்தாவின் எதிர்காலம்,” என்றார் அவர்.