வெளிநாட்டு வேலை மோசடி கும்பலிடமிருந்து 533 மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்: சைஃபுதீன்

­2021 முதல் மொத்தம் 533 மலேசியர்கள் வெளிநாட்டு வேலை மோசடி கும்பல்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் எழுத்துப்பூர்வ நாடாளுமன்ற பதிலில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளால் ஏமாற்றப்பட்டதாக காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட 672 மலேசியர்களில் அவர்களும் அடங்குவர். மேலும் பலர் மியான்மர், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட 672 பேரில், 533 (79%) பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்ட வேளையில் 139 (21%) பேர் சிக்கித் தவிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

2021 முதல் இந்த ஆண்டு ஜூலை 4 வரை இதுபோன்ற மோசடிகள் குறித்து காவல்துறைக்கு 518 புகார்கள் வந்ததாக சைஃபுதீன் கூறினார். மீட்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 431 (81%) ஆண்கள், 102 (19%) பெண்கள். பெரும்பாலானோர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

ஜோகூரில் 113 (21.2%), அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (112 அல்லது 21%), சரவாக் (92 அல்லது 17%) என அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். பெர்லிஸில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பதிவாகவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (531 அல்லது 79%), அதைத் தொடர்ந்து 86 மலாய்க்காரர்கள் (12%), 32 இபான்கள் (5%), 18 இந்தியர்கள் (3%). இந்த விவகாரத்தை அமைச்சகம் தீவிரமாகக் கருதுவதாக சைஃபுதீன் கூறினார். குறிப்பாக இது பெரும்பாலும் மலேசிய இளைஞர்களை உள்ளடக்கியது.

காவல்துறை மூலம் உள்துறை அமைச்சகம், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும், கும்பல்களை முடக்குவதற்கும், இந்த குற்றவாளிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு வேலை மோசடி கும்பல்களை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான முயற்சியில் பொதுமக்கள், அரசு சாரா நிறுவனங்கள், இராஜதந்திர சமூகம், தனியார் துறையின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார். இந்த கும்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அனைத்து தகவல்களையும், புகார்களையும், ஒத்துழைப்பையும் நாங்கள் வரவேற்கிறோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here