கோலாலம்பூர்:
பினாங்கு மாநிலத்தை மிகவும் பாதுகாப்பான மற்றும் நவீனமயமாக்கப்பட்ட மாநிலமாக மாற்றும் முயற்சியாக, மாநிலம் முழுவதும் 5,000 சிசிடிவி கேமராக்களைப் பொருத்தத் திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சாவ் கோன் இயாவ் அறிவித்துள்ளார்.
இந்த சிசிடிவி கேமராக்கள் இணையவழித் தொடர்பு (IoT), பெருந்தரவு (Big Data) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீனத் தொழில்நுட்பங்களுடன் இணைக்கப்படும். இது குற்றச் செயல்களைத் தடுக்கவும், அவசர காலங்களில் விரைந்து செயல்படவும் உதவும் என்று அவர் சொன்னார்.
மொத்தமுள்ள 5,000 கேமராக்களில், 1,000 கேமராக்கள் செபெராங் பிறை பகுதியில் மட்டும் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செபெராங் பிறை நகராட்சி மன்றத்தின் (MBSP) கீழ் ‘SPACE’ (Seberang Perai ASPIRE Centre) என்ற ஒருங்கிணைந்த செயல்பாட்டு மையம் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்த மையத்தைத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















