மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வரும் மோதல் சூழ்நிலையை குறித்து மலேசிய இந்திய முஸ்லீம் தேசிய பேரவை (பெர்மிம்), மலேசிய பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு மகஜரை (Memorandum) சமர்ப்பித்துள்ளது.
அந்த மகஜரில், தற்போதைய போர் நிலைமை உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், குறிப்பாக இந்த புனிதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம் உம்மாவின் நலன் மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகவும் பெர்மிம் மிகவும் வருந்துகிறது. மத்திய கிழக்கு பகுதியில் உருவாகும் இந்த பதற்றம், உலக பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான நிலைகளிலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக இருந்து வருவதால் , ஐக்கிய நாடுகள் அமைப்பின் வழியாக நடுவர் பங்கு வகித்து, சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசிய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளது.
மேலும், போர் பதற்றம் அதிகரிப்பது இந்த காலகட்டத்தில் உலக சமூகத்திற்கு ஏற்றதல்ல என்றும், மனித உயிர்களின் பாதுகாப்பே முதன்மை ஆக வேண்டும் என்றும் அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைதியை முன்னிறுத்தும் மலேசியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு இணங்க, இந்த விவகாரத்தில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும் என பெர்மிம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக அதன் தவைவர் முஹம்மது அஸ்மான் ஷாஹ் கூறினார்.
பெர்மிம் பேரவையில் மலேஷியா முழுவதும் அறுபதுக்கு மேற்பட்ட இணைப்பு சங்கங்கள் இருப்பதையும் அந்த சங்ககளுக்கு எல்லாம் பெர்மிம் மட்டுமே ஒரே தாய் சபையாக கடந்த ஐம்பது வருடங்களுக்குக்கு மேலாக சமுதாய நலனில் அக்கறை கொண்டு தொண்டு ஆற்றி வருவதையும் மற்றும் மலேஷியா இந்தியா முஸ்லிம்களின் நிலைப்பாடு மேலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் வலியுறுத்துதப்பட்டதாக அஸ்மான் ஷாஹ் கூறினார். அரை மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் பெர்மிமின் உதவித்தலைவர் செல்வி ஜரினா மற்றும் உதவி பொருளாளர் டத்தின் சபரினா ஆகியோர் கலந்து கொண்டனர்.









