வெப்ப அலை வீச்சிலிருந்து தப்பிக்க போலீசாருக்கான பிரத்யேக குளிரூட்டப்பட்ட தலைக்கவசங்களை வழங்குகிறது உத்தரபிரதேசம்.

மருத்துவமனைகளில் சிறப்பு குளிரூட்டப்பட்ட அறைகள், வெப்ப அலை பாதிப்பை குறைக்க சிறப்பு வசதிகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.
வெப்ப அலைக்கு எளிதில் ஆளாகும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ வழிகாட்டுதல்கள் விடுக்கப்பட்டன. வெப்ப அலை உயிரிழப்புகளை தவிர்க்க, நண்பகல் நேரத்தில் வெயிலில் அலைவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதனையே பணியாக மேற்கொள்வோர், வெப்ப அலை வீச்சை பெரும் சவாலாக எதிர்கொண்டுள்ளனர்.


ஏழாண்டு கால ஸ்மார்ட் போலீஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தின் போக்குவரத்து காவலர்களுக்கு என குளிரூட்டப்பட்ட தலைக்கவசங்கள் வழங்கப்படுகின்றன. லக்னோவில் நடைபெற்ற தனி நிகழ்வின் போது யோகி ஆதித்யநாத் இந்த குளிரூட்டப்பட்ட தலைக்கவசங்களை வழங்கினார். ஒடிசா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பரிசோதனை அடிப்படையில் இந்த குளிரூட்டப்பட்ட தலைக்கவச திட்டம் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் கான்பூர் மெட்ரோ திட்டத்திற்கான அஃப்கான்ஸ் உள்கட்டமைப்பு திட்டத்தின் ஆதரவுடன், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நிறுவனத்தால் ஏசி ஹெல்மெட்கள் தயாரிக்கப்படுகின்றன. பரிசோதனை அடிப்படையிலான இந்த முயற்சியின் பலன்களைப் பொறுத்து, மாநிலத்தில் கடும் வெயிலில் பணிகளை மேற்கொள்வோருக்கு இந்த குளிரூட்டப்பட்ட தலைக்கவசங்கள் வழங்கப்பட இருக்கின்றன.





















