Home வணிகம் ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் விடுதலை

ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் விடுதலை

ஜிப்ரால்டரில் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய சிப்பந்திகள் விடுவிக்கப்பட்டனர்.
ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் ‘கிரேஸ்-1’, கடந்த மாதம் 4-ந் தேதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமான ஜிப்ரால்டர் கடல் பகுதியில் சென்றது. அப்போது, ஜிப்ரால்டர் போலீசார், அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் ஆகியோர் அந்த கப்பலை தடுத்து நிறுத்தினர்.
ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி, சிரியா நாட்டுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி, அந்த கப்பலை சிறைபிடித்தனர். கப்பலில், மொத்தம் 28 பேர் இருந்தனர். அனைவரையும் கப்பலிலேயே சிறை வைத்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். கேப்டன், தலைமை அதிகாரி, 2 ஊழியர்கள் என 4 இந்தியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, தங்கள் கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை என்று ஈரானும், கப்பல் ஊழியர்களும் மறுத்து பார்த்தனர். ஆனால், ஜிப்ரால்டர் அதிகாரிகள் கேட்கவில்லை.
இங்கிலாந்து அரசை தொடர்பு கொண்ட ஈரான், தங்கள் கப்பலை விடுவிக்காவிட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனால், இந்த விவகாரத்தை ஜிப்ரால்டர் அரசுதான் கையாள்வதாக இங்கிலாந்து கூறிவிட்டது. இதற்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்தது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 4 இந்திய ஊழியர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை முடிவடைந்தது. அவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். தனது விடுதலைக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கப்பல் கேப்டன் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version