Home இந்தியா மும்பையை வாட்டி வதைக்கும் கனமழையால் விமான நிலையத்திற்கு வந்துச்செல்லும் 30 விமானங்கள் ரத்து..118 விமானங்கள் தாமதம்!

மும்பையை வாட்டி வதைக்கும் கனமழையால் விமான நிலையத்திற்கு வந்துச்செல்லும் 30 விமானங்கள் ரத்து..118 விமானங்கள் தாமதம்!

மும்பை

மும்பையில் சுமார் ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் கனமழை கொட்டி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பையில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. நடுவழி ரயில்களில் சிக்கி தவித்த 4,500 பேரை கடற்படையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் மும்பை மக்கள் திணறி வருகின்றனர். இதனிடையே இன்றும் மும்பை மற்றும், அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மும்பையில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 25 செ.மீ மழை கொட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் ஓடும் மிதி ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. மும்பை மட்டுமல்லாது, கொங்கன், கோவா, செளராஷ்டிரா, குச் ஆகிய இடங்கள் மழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில், கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு வந்துச்செல்லும் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 118 விமானங்கள் வருகை, புறப்பாடு கால தாமதமாக இயக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி விமான கண்காணிப்பு வலைத்தளத்தின்படி, 14 உள்வரும் மற்றும் 16 வெளிச்செல்லும் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மும்பையில் இருந்து புறப்படும் 86 உட்பட 118 விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version