பெய்ஜிங் –
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,110ஐ தாண்டி உள்ளது. சீனாவைத் தவிர்த்து இந்தக் கொடிய நோய் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட மெட்ரோ ரயிலில் வாலிபர் ஒருவர் முகக்கவசம் அணிந்து பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த ரயில் அடுத்த ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் முகக்கவசம் அணிந்திருந்த வாலிபர் திடீரென சுருண்டு விழுந்தார்.
உடனே சகப் பயணிகள் அவருக்கு உதவி செய்வதற்கு முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த சிலர் ‘கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ்!’ என அலறினர். இதனால் ரயிலில் பெரும் பதற்றம் உருவானது.
பயணிகள் அனைவரும் கீழே விழுந்து கிடந்த வாலிபரை விட்டு விலகிச் சென்றனர். பின்னர் ரயில் நிலையம் வந்ததும் பெரும்பாலான பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ஓடினர்.