புத்ராஜெயா –
பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவின் இரண்டாம் கட்டம் நாளை ஏப்ரல் முதல் தேதி நடப்புக்கு வருகிறது.
இந்த உத்தரவின் கீழ் தனியார் வாகனங்கள் அவசர வேளை தவிர்த்து மற்ற நேரத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல அரசு அனுமதிக்காது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றைத் துடைத்தொழிப்பதற்கு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அனைத்துத் தனியார் வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர்.
வாகனமோட்டிக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் அவசர வேளைகளில் இதற்கு விலக்களிக்கப்படும் என்று தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று கூறினார்.
இந்தக் காலகட்டத்தில் மின்னியல் தொடர்பு வாடகைக்கார்களும் டாக்சிகளும் சாலையில் செல்ல அனுமதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.