Home இந்தியா ஊரடங்கு உத்தரவு மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பு? மோடி சொன்னது என்ன?

ஊரடங்கு உத்தரவு மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பு? மோடி சொன்னது என்ன?

நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்கப் பிரதமர் மோடி கடந்த மார்ச் 24ஆம் தேதி நாட்டையே 21 நாட்கள் முடக்குகிறோம் என்றார். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தினசரி கூலிகள், சிறிய வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், தெருக்களில் வியாபாரம் செய்பவர்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குக்குப்பின் இவர்கள் எப்படி வாழ்க்கையைத் தொடங்குவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் உதவிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தாலும், அது மக்களுக்கு நேரடியாகச் சென்றடைவதில் இந்த நேரத்திலும் கடுமையாக உள்ளது.

மளிகைக் கடை வியாபாரிகள் பலர் இந்த நேரத்திலும் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இப்படியான சூழலில், பிரதமர் மோடி 2 தினங்களுக்கு முன் தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி உள்பட நாட்டில் 10 மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வீடியோவில் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக வெளியான செய்திகள் ஊரடங்கை நீடிக்க மோடி அறிவுறுத்தியுள்ளார் என மக்களிடம் கொண்டு போய் சேர்த்தன. குறிப்பாக சில டிஜிட்டல் ஊடகங்கள் இந்த ஊரடங்கு உத்தரவு மே 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனச் செய்திகளை வெளியிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் கொரோனாவின் ஆதிக்கத்தையும் உணராமல், சொந்த ஊருக்குச் சென்று விடலாம் எனப் புறப்பட்டுச் சென்று வருகின்றனர். ஐடி உள்ளிட்ட நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் காலத்தை மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தங்கள் ஊழியர்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழலில் மே 4 வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு தனது மேளனத்தைக் கலைத்துள்ளது. மத்திய அரசு, “மே 4 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக எந்தவொரு அறிவிப்பையும் நாங்கள் இப்போதுவரை வெளியிடவில்லை” எனச் செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது.

இதனால் மே 4 வரை ஊரடங்கு என வெளியான செய்திகள் அனைத்தும் பொய் என்பது உறுதியாகியுள்ளது. இதுபோல் செய்திகளை ஊடகங்களே பரப்புவது வேதனையளிப்பதாக அரசியல் ஆலோசகர்கள் விமர்சிக்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version