பெய்ஜிங்,ஏப்ரல் 10-
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 88 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் கொரோனாவால் எந்த மரணமும் நிகழவில்லை என நேற்று அரசு தகவல் வெளியிட்டது.இந்நிலையில், கொரோனா வைரஸ் உருவெடுத்த சீனாவின் உகான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா கோரதாண்டவமாடி வருகிறது.சீனாவிலும் அதன் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து இருப்பதாக அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் அதிகாரமிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழுவில் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் சீனர்கள் வாயிலாக, நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலை வீசக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.
கொரோனாவின் பாதிப்பில் இருந்து சீனாவின் பொருளாதார, சமூக வளர்ச்சி மீண்டு வரும் நிலையில், அவற்றை தடுக்கும் புதிய சவால்களும், சிக்கல்களும் உருவாகிறது என ஜி ஜின்பிங் கவலை தெரிவித்ததாகவும் அது தெரிவித்துள்ளது.