Home உலகம் அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்

அமெரிக்க மாகாணங்களை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்

வாஷிங்டன், ஏப்ரல் 25-

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், அந்த கொடிய வைரசால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

அதன்படி அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் 10 லட்சத்தை எட்டும் நிலை உள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 50 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் ஏற்கனவே நிலைகுலைந்துள்ள அமெரிக்காவை இயற்கை பேரிடர்களும் தங்கள் பங்குக்கு திணறடித்து வருகின்றன. கடந்த வாரம் அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டது. மிசிசிப்பி, டெக்சாஸ், அலபாமா, லூசியானா ஆகிய மாகாணங்களை புயல் தாக்கியதை தொடர்ந்து, கனமழை கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 26 பேர் பலியாகினர்.

இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை நேற்று முன்தினம் புயல் மற்றும் சூறாவளி கடுமையாக தாக்கியது. ஒக்லஹோமா, டெக்சாஸ் மற்றும் லூசியானா ஆகிய மாகாணங்களில் மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் புயல் காற்று சுழன்றடித்தது.

புயலை தொடர்ந்து, பயங்கர சூறாவளி காற்றும் வீசியது. புயல் மற்றும் சூறாவளியில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இதனிடையே, புயல் மற்றும் சூறாவளியை தொடர்ந்து, மேற்கூறிய 3 மாகாணங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டியது. பல இடங்களில் பெரிய அளவில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் தெரிகிறது.

கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. 3 மாகாணங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலர் மாயமாகி உள்ளனர்.

புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை 12 புயல்கள் தாக்கியதும், இதில் 76 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொலைகார கொரோனா வைரசால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்து வரும் நிலையில் புயல், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களால் மக்கள் உயிரிழப்பது அமெரிக்காவில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version