மலாக்கா: முன்னாள் மலாக்கா முதல்வர் டான் ஸ்ரீ அலி ருஸ்தாம் மாநிலத்தின் ஏழாவது கவர்னராக நியமிக்கப்படுவார் என்று தகவல் கசிந்துள்ளது அவருக்கு வாழ்த்துச் செய்திகள் புதன்கிழமை முதல் வாட்ஸ்அப் குழுக்களில் அலையென திரண்டன. 70 வயதான முகமட் அலி 1999 முதல் 2013 வரை முதல்வராக இருந்தார்.
அவர் 2013 பொதுத் தேர்தலில் ஹாங் துவா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் பி.கே.ஆரின் டத்தோ ஷம்சுல் இஸ்கந்தர் இவரை தோற்கடித்தார். முகமட் அலியின் உதவியாளர் ஆளுநரின் பதவியை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார். இருப்பினும் அவரது பெயர் “பட்டியலில் முதலிடத்தில் உள்ளது” என்று கூறினார்.
முகமட் அலியின் பெயரை மாநில அரசு பரிந்துரைத்திருந்தாலும் இந்த நியமனம் கூட்டாட்சி தலைமையைப் பொறுத்தது என்றார். முகமட் அலியின் பெயரை முதலமைச்சர் டத்தோ சுலைமான் எம்.டி அலி பரிந்துரைத்தார் என்பதும் அறியப்படுகிறது.
தற்போதைய ஆளுநர் துன் டாக்டர் முகமட் காலீல் யாகோப்பின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடையும் என்றும் புதிய ஆளுநரை வரவேற்க உத்தியோகபூர்வ விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் நம்பதக்க வட்டாரத்தைச் சேர்ந்த பேச்சாளர் தெரிவித்தார்.