ஆச்சரியமும் அதிசயமும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அது நடந்திருக்கிறது. மூன்று எண் எண்ணிக்கை இரண்டாக இறக்கம் கண்டிருக்கிறது என்பது ஆச்சரியமல்ல. முன்னணியாளர்களின் முயற்சி. அவர்களின் அயரா உழைப்பும் தியாகமும்.
ஒரு முயற்சிக்குப் பலன் இருக்கவேண்டும் என்பது எதிர்ப்பார்ப்பு. அந்த எதிர்ப்பார்ப்பு பலன் கொடுக்கும்போது தான் உழைப்பின் உயர்வு ஆனந்தமாக இருக்கும். அந்த ஆனந்தம் நேற்று உணரப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் இஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.
தொற்றின் எண்ணிக்கை 187 ஆக இருந்தது. அது 15 ஆக குறைந்திருப்பது என்பது சுகாதரத்துறையின் உழைப்புக்குக் கிடைத்த மரியாதையாகும். இது ஆச்சரியமான இறக்கம்.
மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையயை மக்கள் மதிக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்பதை இது உணர்த்துகிறது. இந்தப் பெருநாளில், பெருநாள் உணர்வுகளுக்குத் தாங்களே வேலியிட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதை இது காட்டுகிறது.
அரசாங்கம் மக்களின் நன்மைக்காகவே சில திட்டங்களைச் சட்டத்தின் மூலம் புகுத்துகிறார்கள். அதை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக உணர்ந்துகொண்டால் அதிலுள்ள நன்மைகள் புரியும்.
பலர், நுனிப்புல் மேய்ந்த கதையாக விமர்சனத்திற்கு மாறிவிடுகின்றனர். விமர்சனங்கள் அற்புதமான கலை. அது முறையாகச் செய்யப்பட்டால் நன்மை அதிகமாகும். அதைத்தவறாகக் கையாண்டால் பல தரப்புக்குத் துன்பமாகிவிடும்.
சுகாதாரத்துறையின் முயற்சிகள் ஆரோக்கியமானவை. அதற்காக உழைத்தவர்கள் நிறைந்த தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களால்தான் எண்ணிக்கை 15 ஆகியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகரிக்காது என்பதற்கு உத்திரவாதம் இல்லை. ஆனாலும் மிகையாகக் குறைக்க முடியும் என்பது சுகாதாரத்துறையிடம் இல்லை. மக்கள் கைக்களில்தான் இருக்கிறது.
எண்ணிக்கை 15 என்பது ஒரு சான்று. தொடர்ந்து மக்கள் கூடல் இடைவெளி ஆணையை உணர்ந்து செயல்பட்டால் நாட்டின் பொருளாதாரமும் மீட்சிபெறும். வேலை வாய்ப்புகலௌம் உருவாகும். அனைத்தும் சாத்தியமே. மனம் வைத்தால் மட்டுமே இது வெற்றிதரும். இன்று மக்கள் மாறியிருக்கிறார்கள் என்பதற்கு நோன்புப்பெருநாள் ஒரு சான்று. இன்னும் தியாகங்கள் செய்யவேண்டும். செய்வார்கள். மலேசியர்கள், உலகுக்கு ஓர் உதாரணம்.