புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவது என்பது கைபடாத ரோஜா கதை அல்ல. புத்ரா ஜெயா என்பது நாட்டின் ஆட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டான இடம். முடிவுகள் எடுக்கப்படும் இடம். இன்றைய நடப்புகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் இடமாகவும் அமைந்திருக்கிறது.
ஒட்டு மொத்த நாடாளுமன்றம் கூடும் இடமாக இருக்கிறது என்பதால், புத்ரா ஜெயா ஒரு புனித இடமாக மதிக்கப்படுகிறது. இந்த இடத்திற்கு வருகையாளர்களாக வந்துபோவதில் தடையில்லை. முன்னறிவிப்பு இல்லாமல் வந்துபோக அனுமதியைப் பொறுத்தது. வழியில் கனமில்லாமல் அங்கு சென்று வரலாம்.
இப்படிச்செய்வதற்கு அரசியல்வாதிகளால் முடியுமா? முடியும் , அல்லது முடியாது என்று பதில்கள் இருந்தாலும், கைப்பற்றுவோம் என்பதில் நிறைந்த விஷமம் இருக்கிறது என்பதுதான் பிரச்சினை.
கைப்பற்றுவோம் என்பது அத்துமீறலின் ஒருபகுதி. புத்ராஜெயாவை அடைவதற்கும் கைப்பற்றலுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. கைபற்றுவோம் என்பதில் நாட்டின் மக்களாட்சி மதிக்கப்படவில்லை என்பதாக ஆகிவிடும்..
புத்ரா ஜெயா யாரையும் ஒதுக்க வில்லை. முறையான பொதுத்தேர்தலுக்குப்பிறகு ஆட்சியமைக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் அமரக்கூடிய இடமாக அது அமைந்திருக்கிறது. அதனால், அங்கு அமரக்கூடியவர்கள் மக்கள் வழி தேர்வு பெற்றவர்களாக, முன்வாசல் வழி வரவேண்டும் என்பது விதி. அப்படி வராவிடால் அதற்குப் பேர் சதி.
சதிச்செயலை புத்ரா ஜெயா சகித்துக்கொள்ளாது என்பதற்கு உதாரணங்கள் பல இருக்கின்றன. சதிச்செயலால் வெற்றியா தோல்வியா என்பது புத்ராஜெயாவின் வேலை அல்ல. சதிச்செயல் அரசியல் வாதிகளின் வேலை. அங்கு அமரக்கூடியவர்கள் மட்டுமே இங்கே நிலைப்பார்கள். சுற்றி வளைத்துகொள்ள எவராலும் முடியாது. அப்படியிருந்தால் புத்ரா ஜெயா சும்மாவிடாது.
முறையாக மக்களின் அபிமானம் பெற்றவர்களே புத்ரா ஜெயா அமர வைக்கும் அழகு பார்க்கும். ஆட்சி செய்ய உறுதுணையாக் இருக்கும். ஆனாலும் எவருக்கும் நிரந்தரம் என்பது மட்டும் இல்லை. அப்படியிருந்தால் அதுதான் தொல்லை.
புத்ரா ஜெயா மக்களின் பிரதிநிதித்துவம். மக்களின் ஓட்டுரிமைக்கு மகுடம் சூட்டும் இடம். இங்கு வார்த்தை ஜம்பங்களுக்கு வாய்ப்பில்லை. வாய் உள்ளவர்கள் பேசுவதெல்லாம் வார்தையில்லை.