நாட்டின் தீவிரவாத தடுப்பு கமாண்டோ பிரிவான என்எஸ்ஜியில் இதுவரை 55-க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள், ஊழியர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
என்எஸ்ஜி பிரிவில் கரோனாவில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் நிர்வாக ரீதியிலான பணியில் இருப்பவர்கள், மிகச்சிலர் மட்டுமே கமாண்டோக்கள். டெல்லி பாலம் அருகே இருக்கும் என்எஸ்ஜி தலைமை அலுவலகம், குர்கிராமில் இருக்கும் மனேசர் அலுவலகத்தில்தான் பெரும்பலான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதுகுறித்து என்எஸ்ஜி படைப்பிரிவின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘ தீவிரவாத தடுப்பு படையில் இருக்கும் வீரர்கள் சிலருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் மேல் நிர்வாக ரீதியான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள். தீவிரவாத தடுப்புபணியில் எந்த நேரமும் களமிறங்க வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். எந்த சவாலான சூழலையும் எதிர்கொள்ள தயாாக இருக்கிறார்கள்’ எனத் தெரிவித்தார்
முதன்முதலில் கடந்த மே மாதம் என்எஸ்ஜி மருத்துவமனையின் செவிலியர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து பரவி இப்போது 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சில கமாண்டோ வீரர்கள் அறிகுறிஇல்லாமல் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களின் தொடர்பு குறித்த விவரத்தை சேகரித்தும், பரிசோதனை நடத்தியும் மற்றவர்களைக் கண்டுபிடித்துள்ளனர். இப்போது கமாண்டோக்கள் சிலர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள், பெரும்பாலானவர்கள் உடலநலன் தேறிவிட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்எஸ்ஜி படையில் இருக்கும் 55-க்கும் மேற்பட்டவர்களும் டெல்லியின் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும், மத்திய ஆயுதப்படை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டஇந்த என்எஸ்ஜி பிரிவு 5 பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது.
இதில் சிறப்பு அதிரடிப்படை (எஏஜி) பிரிவுதான் தீவிரவாதிகளை ஒழித்தல், விமானக்கடத்தைத் தடுத்தல் பிரிவுகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் எஸ்ஆர்ஜி பிரிவும் தீவிரவாத தடுப்புப்பிரிவிலும், விஐபிக்கள் பாதுகாப்பு வழங்குதலுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முதல்வர்களான யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால், முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, முலாயம் சிங் ஆகியோருக்கு எஸ்ஆர்ஜி பிரிவினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்