கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் மாதம் மத்தியில் எம்சிஓ எனப்படும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து மூடப்பட்டிருக்கும் நாடு தழுவிய அனைத்து இடைநிலைப்பள்ளிக்கூடங்களும் வரும் ஜூன் 24ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் எனவும் குறிப்பிட்ட மாணவர்களே பள்ளிக்கூடம் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ரட்சி முகமட் ஜிடின் நேற்று அறிவித்தார்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வீடுகளில் முடங்கியபடி ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்த பொதுத் தேர்வுகளுக்கான மாணவர்களும் இதே தரத்திலான அனைத்துலக கல்வித் தேர்வுகளுக்கான மாணவர்களும் மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
5ஆம் படிவம், 6ஆம் படிவம் எஸ்.பி.எம். எனப்படும் மலேசியத் தொழில் கல்வி தேர்வு, எஸ்.பி.ஏ.எம். எனப்படும் சமய உயர்நிலைக் கல்வி தேர்வு, எஸ்.டி.பி.எம். எனப்படும் மலேசிய உயர் கல்வி தேர்வு ஆகியவற்றைச் ஙே்ர்ந்த 500,400 மாணவர்களும் (இவர்கள் 2,440 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்) சில நூறு அனைத்துலக பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஜூன் 24ஆம் தேதி வகுப்பறைகளுக்குத் திரும்பலாம் என்று அவர் நேற்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கூறினார்.
தேசியப் பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க அமைச்சு முடிவெடுத்திருக்கிறது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்கு எஸ்ஓபி எனப்படும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்