பக்காத்தான் ஹராப்பான் பிளஸ் சார்பில் 95 வயதான துன் டாக்டர் மகாதீர் முகமது மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் சீனர், இந்தியர்கள் வாக்குகள் பறிபோகும் என்று சிலாங்கூரைச் சேர்ந்த சுங்கை பீலேக் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ எச்சரித்தார்.
2018இல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பக்காத்தான் ஹரப்பான ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இதனால் சீனர் மற்றும் இந்தியர்கள் ஆதரவு மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் பக்கம் திரும்பியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் பிளஸ் கூட்டணிக்கு துன் டாக்டர் மகாதீர் பிரதமர் என்றால் சீனர், இந்தியர் வாக்குகள் பறிபோகும். இது உறுதி என்று அவர் எச்சரித்தார்.
இது என்னுடைய கருத்து, கட்சியின் கருத்தல்ல. துன் மகாதீருக்கு பதில் டத்தோஸ்ரீ அன்வார் பிரதமாராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியர், சீனர்கள் வாக்குகள் மீண்டும் நமக்கு கிடைக்கும் என்றார்.
மக்களின் ஆதரவை பெறுவதற்கு நமக்கு ஒரே சிறந்த தேர்வு அன்வார் இப்ராஹிம் மட்டுமே என்று ஜசெக உச்சமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிடம் இருந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அன்வாருக்கு போதுமான ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் பிளஸ் கூட்டணியில் யார் பிரதமர் என்ற சர்ச்சையில் கெஅடிலாம், அமானா, ஜசெக கட்சிகளிடையே பிளவு ஏற்படாது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றினால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் துன் டாக்டர் மகாதீர் பிரதமராகவும் அன்வார் துணைப் பிரதமராகவும் பதவி வகிக்க ஜசெக தனது நிலைப்பாட்டை தெரிவித்துக் கொண்டதில் தொடர்பில் சர்ச்சை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.