கொரோனா ஊரடங்கு காரணமாக இப்போது லண்டனில் இருக்கிறார் ராதிகா ஆப்தே. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்.தனது லண்டன் அனுபவம் பற்றி கூறிய அவர், ஊரடங்கு காரணமாக மக்கள் வெப்சீரிஸ்களை அதிகம் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். லண்டன் தெருக்களில் நான் நடந்து சென்றால் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
இவ்வளவு காலம் லண்டனில் தங்கி இருப்பதும் இதுதான் முதன்முறை. ரசிகர்கள் என்னை நேரில் சந்திக்கும்போது, உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது என்று சொல்வதையோ பாராட்டுவதையோ வரவேற்கிறேன். ஆனால், நடுரோட்டில் நின்றுகொண்டு என் பெயரை சொல்லிக் கத்தும்போதும் நான் ஜாக்கிங் செல்லும்போது கவனத்தைத் திசைத் திருப்பும்போதும் கவலையாகி விடுகிறேன்.
ஒரு முறை நான் விமானத்தில் இருந்தபோது, ஒருவர் என்னருகில் வந்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் நான் சோர்வாக இருந்தேன். அதனால் நன்றாக அசந்து தூங்கிவிட்டேன். கண்விழித்து பார்த்த போது, அந்த நபர் மீண்டும் போனை என்னை நோக்கி நீட்டியபோது அதிர்ச்சி அடைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.