நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க பராமரிப்பின் கீழ் உள்ள 55 ஆண்டுக்கும் மேல் பழமைவாய்ந்த டெம்ப்ளர் அடுக்குமாடி வீட்டு கட்டடத்தின் தரம் மேம்படுத்தும் நடவடிக்கையை கடந்தாண்டு தொடங்கி மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இங்கு நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அம்மாநில உள்நாட்டு வீடமைப்பு, கிராமம் மற்றும் புறநகர் மேம்பாட்டு துறைத் தலைவர் தியோ கொக் சியோங் கூறினார்.
சிரம்பானில் மிகவும் உயர்ந்த குடியிருப்பு அடுக்குமாடி வீடாக திகழும், 14 மாடிகளை கொண்ட இந்த இரண்டு புளோக் கட்டங்களை கொண்ட டெம்ப்ளர் அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 238 வீடுகள், 28 கடைகள் அடங்கிவுள்ளது என்றும், இவையணைத்தும் குறைந்த கட்டணத்தில் வசதி குறைந்த மக்களுக்காக மாநில அரசாங்கத்தால் வாடகை தரப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 1200 பேர் வசிக்கும் இக்குடியிருப்பில் 60 சதவிதம் முதியோர்கள் வாழ்கிறார்கள் என்றும், உயர்ந்த அக்கட்டடதத்திலிருந்து அம்முதியவர்கள் மட்டுமல்ல பொதுவாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கீழே இறங்கவும், மேலே ஏறவும் 4 லிஃப்ட் சேவை கடந்த 55 ஆண்டுக் காலமாக இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக அவை அடிக்கடி பழுதாகும் நிலை ஏற்படவே, அங்குள்ள முதியோர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வந்தார்கள்.
புதிய லிஃட் சேவை வேண்டும் என அங்குள்ள குடியிருப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு விடியலாக, கடந்தாண்டு அப்பகுதி வருகைப்புரிந்த மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடினின் வருகை அமைந்தது. அம்மேம்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசாங்கம் சிறப்பு நிதியை வழங்கியது. அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் முயற்சியால் 4 புதிய லிஃப்ட் அமைக்க மத்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
மத்திய அரசாங்க ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து தற்போது வெ.1.7 மில்லியன் செலவில் நான்கு புதிய லிஃப்ட் பொருதத்தும் நடவடிக்கை எதிர்வவரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும். மேலும் மாநில அரசாங்க நிதி ஒதுக்கீடான வெ.435,000 செலவில் அந்த இரு அடுக்குமாடி வீட்டு கட்டடத்தின் மின்சார கம்பி, கருவிகள் மற்றும் மின் விளக்குகள் அனைத்தும் புதிதாக மாற்றப்படும் என தியோ தெரிவித்தார்.
முன்னதாக நேற்று காலை 10.00 மணியளவில் இங்கு வருகைப்புரிந்த வீடமைப்பு துறை அமைச்சின் சிறப்பு அதிகரிகள் மற்றும் குத்தகையாளருடன் நடைப்பெற்ற சந்திப்பு கூட்டத்திற்கு அவர் தலைமையேற்றார். அவருடன் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீவ் சே யோங்கும் கலந்துக்கொண்டார். அவர்களுக்கு அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
– நாகேந்திரன் வேலாயுதம்