வாராகி காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வணங்கினால் கேட்ட வரங்களை கொடுப்பவள். வாராகி அம்மன் பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்த கன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். அஷ்ட வாராகியாக மகா வாராகி, ஆதி வாராகி, ஸ்வப்ன வாராகி, லகு வாராகி, உன்மத்த வாராகி, சிம்ஹாருடா வாராகி, மகிஷாருடா வாராகி, அச்வாருடா வாராகி என எட்டு வாராகிகள் அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டு கோயிலையும் உள்ளடக்கிய அஷ்டவாராகி கோயில் விழுப்புரம் சாலாமேட்டில் அமைந்துள்ளது. உலகிலேயே வாராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாக கருதப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் வாராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் கோயில் உள்ளது. இங்கு வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும். இழந்த செல்வம் திரும்ப வரும் வாராகி அம்மனுக்கு எட்டு சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டினால் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதோர் வீட்டிலேயே வாராகி அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வந்தாலும் இழந்த செல்வங்களை பெறலாம்.
நமக்கு இருக்கும் தீராத கஷ்டமாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும், தீராத மன கஷ்டம், பணக்கஷ்டம், எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் வாராகி அம்மனை நினைத்து விரதம் இருந்து தலைவாழை இலை விரித்து, அதில் பச்சரிசியை கொட்டி பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை உடைத்து இரண்டுமுடிகளாக வைத்து, அதில் இலுப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு, தீபம் ஏற்றினால் போதும். இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் வாராகி அம்மன் கோயில் இருந்தால் அங்கு செய்யலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிறிய வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன்முன் செய்து வரலாம்.
வாராகி அம்மனுக்கு சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்பு தாமரை மிகவும் பிடிக்கும். பஞ்சமி திதி அன்று விரதம் இருந்து வாரகியை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத்தரும்.வாராகி அம்மனுக்கு பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் நீக்காத தயிர்சாதம், நவதானிய அடை, தோசை இவை அனைத்தும் மிகவும் பிடிக்கும்.