கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால் அப்போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த அருகில் வசித்து வந்த கிராமத்தினர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிராமத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் அரசு தரப்பில் மீட்பு படையினர் விரைந்து சென்று விமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து விமானத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட படையினர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்டமாக அறிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 பேர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கேரள விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதில் விமானி, துணை விமானியும் உள்ளடக்கம் ஆகும்.
இதற்கிடையில், இந்த விபத்தில் விமானத்தில் உயிரிழந்த 18 பேர் தவிர எஞ்சிய 172 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.