மூடநம்பிக்கை காரணமாக மனைவியை நரபலி கொடுத்த கொடூர கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள பசவுடா கிராமத்தில் 50 வயது ஆண், 45 வயது மனைவி, இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். அந்த நபர் மூடநம்பிக்கையில் மொத்த உருவம். கடவுளை திருப்திபடுத்துவதாக கூறி வீட்டில் அடிக்கடி உயிர்பலி கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சென்ற வாரம் ஒரு ஆட்டை வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தியதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு அவர் தனது மனைவியை இரண்டாக வெட்டி, தலை ஒரு பக்கம், உடல் ஒரு பக்கம் என வைத்து பூஜை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்தநபரை கைது செய்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கடவுள் அவரது கனவில் தோன்றியதாகவும், அப்போது தன்னுடைய மனைவியை பலியிட சொல்லி கேட்டதாகவும் கூறினார். அதனால் மனைவியை கொன்று பூஜை செய்ததாக போலீஸாரிடம் கூறினார்.
மேலும் தன்னுடைய தந்தை கடவுள் நம்பிக்கையால் தன்னுடைய அம்மாவை பலி கொடுத்துவிட்டு ஓடிவிட்டதாகவும் போலீஸிடம் அவர் தெரிவித்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.