ஸ்கூடாய் –
கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியை ச. கோமதி, கனடா, டொரோண் டோவில் நடைபெற்ற அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்திருக் கிறார். இந்தப் போட்டியில் அவர் இரண்டு தங்கப் பதக்கங்களையும் கனடா நாட்டின் இரண்டு சிறப்பு புத்தாக்க விருதுகளையும் வென்றார்.
இவருடைய கண்டுபிடிப்பு அறிவுசார் சொத்துடைமை சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அவருக்கு உலக அறிவியல் புத்தாக்கச் சங்கத்தின் சிறப்பு விருதும் சான்றிதழும் கிடைத்துள்ளது.
ஏற்கெனவே இவர், கடந்த மாதம் மலேசியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக புத்தாக்கப்போட்டியில் தொழில்நுட்பப் பிரிவில் தங்கப் பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
இப்போட்டியில் கோமதியின் வழிகாட்டலில் இரண்டு மாணவர் குழுக்கள் வெண்கலப் பதக்கங்களை வென்றன. கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி பெரியாச்சி சாதனை படைத்த கோமதியைப் பாராட்டினார்.
மலேசியாவுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளதாக பெரியாச்சி கூறினார்.
இவர் மாணவர்களின் புத்தாக்க அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தூண்டுகோலாய் உள்ளார். 2018ஆம் ஆண்டு கொரியாவில் நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில் கோமதி இரண்டு தங்கப் பதக்கங்களையும் அந்நாட்டின் சிறப்பு விருதையும் 500 அமெரிக்க டாலர் ரொக்கப் பரிசையும் வென்றார்.
2019ஆம் ஆண்டு அறிவியல் புத்தாக்கப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
அதோடு, கனடா அரசாங்கம் புதுமைப் புத்தாக்க சிந்தனையாளர் விருதையும் ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசையும் கோமதிக்கு வழங்கியது.