பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசாருக்கு மோட்டார் சைக்கிள் திருடு போனதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் நேற்று 15.9.2020 இரவு 11.50 மணியளவில் ஜாலான் பிஜே 2பி/1 டேசா மெந்தாரி 2 இல் சோதனை நடத்திய போது 29 வயதுடைய ஆடவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்நபர் மீது ஏற்கெனவே போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகிய குற்றப்பதிவு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
அந்நபர் தனது சகோதரர் உள்ளிட்ட மேலும் 2 பேருடன் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவதாக ஒப்புக் கொண்டதோடு திருடிய மோட்டார் சைக்கிளை 800 வெள்ளி முதல் 1,000 வெள்ளி வரை விற்று வருவதாகவும் கூறினார்.
தகவலை பெற்றவுடன் போலீசார் நள்ளிரவு 1.00 மணியளவில் ஜாலான் பிஜேஎஸ் 2பி மெட்ரோ ஸ்குவார்டாஸ் என்ற இடத்தில் மேலும் ஒரு ஆடவரை கைது செய்தனர். அவர் மீதும் வழிப்பறி மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட குற்றப்பதிவுகள் இருக்கிறது.
போலீசார் அவ்வட்டாரத்திலேயே மேலும் இருவரை கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் எந்த குற்றப்பதிவும் இல்லை என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் ஏசானி தெரிவித்தார்.
கைது செய்யபட்ட நான்கு பேரை தவிர அவர்களின் நண்பர்கள் பலர் மோட்டார் சைக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூடிய விரைவில் அனைவரையும் கைது செய்வோம் என்றும் அவர் கூறினார். செக்ஷன் 379A கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் நான்கு பேரும் 4 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுவர்.