அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் 306 தேர்தல் சபை வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்டு டிரம்ப் 232 தேர்தல் சபை வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.
தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பிடன் அமெரிக்க அதிபராக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தேர்தலில் தோல்வியடைந்த தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தேர்தல் முறை தொடர்பாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் ஜனவரி 20- ஆம் தேதிக்கு முன்னதாகவே வெள்ளைமாளிகையை விட்டு வெளியேற நினைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் முடிவுகள் தொடர்பாகக் குற்றம்சுமத்திவரும் அதிபர் டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேற மறுத்துவரும் நிலையில் மெலனியா டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி வீட்டிற்கு சென்றால் போதும் என நினைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறிய பின்னர் நியூயார்க்கில் உள்ள டிரம்பின் வீடு, புளோரிடா மாகாணத்தின் பிலேம் பீட்ச் பகுதியில் உள்ள வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல்.
வெள்ளைமாளிகையில் உள்ள அதிபர் டிரம்பிற்கு சொந்தமான பொருட்களை நியூயார்க்கில் உள்ள டிரம்பின் வீட்டிற்கு மாற்றுவது தொடர்பாக மெலானி விவாதங்கள் நடதிவருவதாகவும் கூறப்படுகிறது.