மாஸ்கோ-
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசக் கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. அந்த தடுப்பூசிகள் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக ரஷியாவில் கமாலியா நிறுவனம் ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி பல கட்ட சோதனையிலும் வெற்றிபெற்றது.
இதையடுத்து, ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷியாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டில் இந்த தடுப்பூசி 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளபோதும் அதன் பரிசோதனை முடிவுகளையும் ரஷியா தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மேலும் ஒரு பரிசோதனை முடிவுகளை ரஷியா இன்று வெளியிட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு 21 நாட்களுக்கு பின்னர் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டவர்களில் 22 ஆயிரத்து 714 பேரிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 21 நாட்களுக்கு பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல்திறன் 91.4 சதவிகிதம் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது என ரஷிய அரசு தெரிவித்துள்ளது.