ச.வே. சுப்பிரமணியன் (பிறப்பு: டிசம்பர் 31 1929), தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய தமிழ் நிகண்டுகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008- ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன.
இவர் திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் சு. சண்முகவேலாயுதம், இராமலக்குமி ஆகியோருக்குப் பிறந்தவர். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலைத் தொடக்கப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார்.
இடைநிலைக் கல்வியை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, 1950-53-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பெற்றார்.
1953-56 காலப்பகுதியில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56 தமிழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றினார்.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் இதுவரை தமிழில் 54, ஆங்கிலத்தில் 5, மலையாளத்தில் ஒன்று என 60 நூல்களை எழுதியுள்ளார். பல கருத்தரங்குகளிலும் உரையாற்றியுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.
நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் 1969- இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கினார். *ராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
தொல்காப்பியச் செம்மல், கம்பன் விருது, கி. ஆ. பெ. விசுவநாதம் விருது உள்ளிட்ட விருதுகளும் பெற்றுள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு “தமிழ் ஞாயிறு” என்னும் பெயரிலும், “சாதனைச்செம்மல்.ச.வே.சு” என்னும் பெயரிலும் நூலாக வெளிவந்துள்ளது.