டெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் இன்று 36- ஆவது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் நேற்று 6- ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் 4 கோரிக்கைகளில் 2- இல் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அந்திரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, 7- ஆம் சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 4- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், அரியானா எல்லையை போலவே உத்தரபிரதேச-டெல்லி எல்லையிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி-உத்தரபிரதேச எல்லையில் போராடி வரும் விவசாயிகளில் ஒருவரின் மகளுக்கு இன்று பிறந்தநாள். இதனையடுத்து, தனது மகளின் பிறந்தநாளை போராட்ட களத்திலேயே கொண்டாட அந்த விவசாயி திட்டமிட்டார்.
அதன்படி, போராட்ட களத்திலேயே அந்த விவசாயின் மகள் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த இளம்பெண்ணுக்கு போராட்ட களத்தில் போராடிவரும் விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர்.