ஜெனிவா: ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள வேகமாகப் பரவும் உருமாறிய கொரோனாவின் பரவலும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் சுமார் 2.28 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரேசில் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
தடுப்பு மருந்து மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் ஆகியவற்றின் தடுப்பு மருந்துகள் மூன்றுகட்ட மருத்துவ சோதனைகளை முடித்துள்ளன. இவற்றில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளுக்கு பல்வேறு நாடுகளும் அனுமதியளித்துள்ளன.
இந்நிலையில், ஃபைசர் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற்ற முதல் கொரோனா தடுப்பு மருந்தாக ஃபைசர் உருவெடுத்துள்ளது.