மேலூர், கீழுர் கிராமங்களுக்கு வடுகம் பகுதியில் இருந்து செல்ல வேண்டும். கெடமலைக்கு புதுப்பட்டியில் இருந்து 11 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதேசமயம், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டியை அடுத்த சம்பூத்துமலையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில்தான் கெடமலை உள்ளது. தற்போது சம்பூத்து மலை வரை தார்சாலை வசதியுள்ளது.
அதற்கு மேல் வனப்பகுதியில் உள்ள சாலையில் செல்ல வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இங்குள்ள மக்கள் மிளகு, சாமை, தினை, கொள்ளு போன்றவற்றை தங்களது வாழ்வாதாரத்திற்காக சாகுபடி செய்கின்றனர். இதற்காக கடுமையாக உழைக்கும் அவர்கள், மலைப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட பல்வேறு கொடிய மிருகங்களுடன் போராடியே அதை காப்பாற்றி வருகின்றனர்.
ஆனால் இப்படி காப்பாற்றி வளர்த்த பயிர்களை உரிய நேரத்தில் அவர்கள், அடிவாரத்திற்கு கொண்டு வந்து விற்பதற்கு உரிய சாலை வசதி இல்லை. இதனால் ஆண்டு முழுவதும் அவர்கள் கடுமையாக உழைத்தும் அதற்கான பலன் இல்லாமல் போகிறது.இப்படி பயிர்களை காக்க போராடும் மக்கள், தங்களது உயிர்களை காக்கவும் பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது பெரும் வேதனை.
இங்கு வசிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் கரடு, முரடான பாதைகளில் பலகிலோ மீட்டர் தூரம் நடந்து அடிவாரத்தில் உள்ள ஆயில்பட்டிக்கு வரவேண்டும். சாலை வசதி, வாகன வசதி இல்லாததால், கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டோரை டோலி கட்டி அதன் மூலம் மட்டுமே தூக்கி வரவேண்டும்.