மியான்மரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் , மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைக்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், மியான்மரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. மேலும், மியான்மரில் நிலவும் சூழ்நிலை கவலை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.