ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறுபடை கோயில்களில் ஒன்று.
இந்த கோயிலில் இருக்கும் சிலையானது 18 சித்தர்களில் ஒருவரான போகரால் முழுக்கு செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திரம், தைப்பூசம், சித்ரா பௌர்ணமி, அக்னி நட்சத்திரம் உள்பட பல்வேறு விழாக்கள் மிகச் சிறப்பாக இந்த கோயிலில் கொண்டாடப்படும். சங்க காலத்தில் இயற்றப்பட்ட திருமுருகாற்றுப்படை நூலில் தமிழ்க் கடவுள் முருகன் எனக் குறிப்பிடப்படுகிறது.
அதோடு குறிஞ்சித் திணையின் கடவுளாகவும் முருகன் பார்க்கப்படுகிறார். இதுபோல முருகன் தமிழுக்கான கடவுள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஏராளமான தமிழ் இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. அதனடிப்படையில் முருகன் தமிழ் கடவுளா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது முருகன் தமிழ் கடவுள் அல்ல என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 5 ஆம் தேதி தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவை பிறப்பித்த நிலையில், ஜனவரி 7ஆம் தேதி முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிடக்கோரி மனு அளித்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிட உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, முருகன் எனும் பெயருக்கு அழகு, திறமை, அறிவு, இளமை என பல பொருட்கள் உள்ளன. முருகனைத் தமிழ்க்கடவுள் என்று பலரும் அழைக்கின்றனர். ஆனால் அதனை எவ்வாறு இதுபோல அறிவிப்பு செய்து அரசிதழில் வெளியிட முடியும்? என கேள்வி எழுப்பினர்.
மேலும் தைப்பூசத்தைp போலவே கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட விழாக்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆகவே இந்த விவகாரம் மதத்தை அடையாளப்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது.
இந்து மதத்தில் பல கடவுள்கள் உள்ளனர். முருகனை பாடாமல் பிற கடவுளர்களை பாடும் தமிழ் இலக்கியங்களும் உள்ளன. ஆகவே அதனடிப்படையில் மட்டும் முடிவு செய்துவிட இயலாது.
தமிழகம் ஒரு மதசார்பற்ற மாநிலம். பல மொழி, மதம், நம்பிக்கையை கொண்ட மக்கள் வசித்து வரும் சூழலில் இதுபோல அறிவிப்பது இயலாதது. அவ்வாறு அறிவித்தால், அது தேசத்தின் மதசார்பற்ற தன்மையைp பாதிக்கும். ஆகவே, அவ்வாறு உத்தரவிட இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.